செவ்வாய், 18 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 55

மூன்றாவது ஸ்கந்தம் - பதினோறாவது அத்தியாயம்

காலக் கணக்கு 

நாம் கடந்த அத்தியாயத்தில் ப்ரஹ்மா செய்த பத்து விதமான சிருஷ்டியைக் கண்டோம். உலகில் ஸ்தாவரங்களான மரம்,செடி, கொடிகள், ஜந்துக்களான விலங்கினங்கள், மனிதர்கள், மேலுலகத்தில் உள்ள தேவர்கள் ஆகிய அனைவரும் தோன்றினார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்மத்தின்படி வாழ்க்கையை நடத்துகிறான். யாருக்குமே மற்ற எல்லாவற்றையும் விட, காலம் பொன் போன்றது. மிகவும் முக்கியமானது. 

‘பல துன்பங்கள், இன்பங்கள் படைத்தாய், பற்றிலார் பற்ற நின்றானே! கால சக்கரத்தாய்!’ - என்று நம்மாழ்வார் திருவாய் மொழியில் பாடுகிறார். காலத்தையே, தன்னுடைய சக்கரமாகக் கொண்டு, பகவான் இவ்வுலகத்தையே தன் ஆளுகைக்கு உட்படுத்தி இருக்கிறான். காலம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறபடியால், அது காலச் சக்கரம் என்று சொல்லப்படுகிறது. 

அனைத்துப் பொருட்களையும் - ஏன் ஒவ்வொன்றையுமே காலம் தன் வசத்தில் கொண்டிருக்கும். இந்தத் தத்துவம், அதாவது காலம் தானும் மாறிக் கொண்டே இருக்கும். மணி, நிமிடம், வினாடி என்று மாறிக் கொண்டே, தான் எதை மூடியிருக்கிறதோ அந்தப் பொருளையும், ஒவ்வொரு வினாடியும் மாற்றிக் கொண்டே இருக்கும். நம் கையில் இருக்கும் புத்தகத்தையோ, ஏன் நம் உடலையோ, நாம் அணிந்திருக்கும் ஆடையையோ அனைத்தையும் காலம் எனும் தத்துவம் மூடியிருக்கும். ஒவ்வொரு வினாடியும், நிமிடமும், இந்தப் பொருள்கள் எல்லாம் பழையனவாகிக் கொண்டே, சிதைந்து கொண்டே போகும். இதுவே காலத்தின் இயல்பு. 

இந்தக் காலத்தின் பிரிவுகளை மைத்ரேயர், விதுரருக்கு விளக்கமாக உரைக்கிறார். இன்றைய விஞ்ஞானத்தில் ‘நானோ செகண்டு’ அளவுக்கு விஞ்ஞானிகள் அற்புதமாக விளக்கி வருகிறார்கள். பாகவத புராணத்திலும், காலத்தை வெகு அழகாகப் பிரித்துக் கூறுகிறார் சுகாசாரியார். நம்முடைய ஒரு நாள் 24 மணி நேரங்கள் கொண்டது. அதில் 60 நிமிஷங்கள் ஒரு மணி நேரம். புராணத்தின்படி ஒரு 48 நிமிஷம், ஒரு முகூர்த்தமாகச் சொல்லப்படுகிறது. அதே 24 நிமிஷங்கள் ஒரு நாழிகை. 

ஒரு நாளில் 60 நாழிகை இருக்கும். ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகைகள். முப்பது முகூர்த்தம் ஒரு நாள். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம். பதினைந்து லகு ஒரு நாழிகை. பதினைந்து காஷ்டா ஒரு லகு. ஐந்து க்ஷணங்கள் ஒரு காஷ்டா. நான்கு நிமிஷங்கள் ஒரு க்ஷணம். 

மூன்று லவம் ஒரு நிமிஷம். (இந்த நிமிஷம் நாம் ஆங்கிலத்தில் கூறும் மினிட் அல்ல.) மூன்று வேதங்கள் ஒரு லவம். நூறு த்ருடிகள் ஒரு வேதம். மூன்று த்ரிஷரேணுகள் ஒரு த்ருடி. மூன்று அணுக்கள் ஒரு த்ரிஷரேணு. இரண்டு பரமாணுக்கள் ஒரு அணு. காலத்தின் மிகச்சிறிய அளவே பரமாணு என்று சொல்லப்படுகிறது. 


ஒரு கணக்கிற்காகக் கூறுகிறேன். ஒரு நாழிகை 24 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன். மேற்சொன்ன அட்டவணையின்படி வகுத்துக் கொண்டே போனால், ஒரு பரமாணு = .00000033 நிமிடங்கள். (மினிட்ஸ்) அல்லது ஒரு பரமாணு = .00002 வினாடிகள்(செகண்ட்). இந்த அளவுக்குத் துல்லியமாக ரிஷிகள் கணித்துக் கூறியுள்ளார்கள். மேலும் பார்ப்போம். 


பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்து ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரீஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி சரத் ருதுவென்றும், ஐப்பசி, கார்த்திகை வருஷ ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருது என்றும், மாசி, பங்குனி சிசிர ருது என்றும் சொல்லப்படுகின்றன. 

ஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஓர் ஆண்டு, அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றன. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷத்திரங்கள் ஆகியவற்றைக் குறித்து மாறுபடுகின்றன. 

ய: ஸ்ருஜ்யசக்தி முருதோச்ச்வஸயன் ஸ்வசக்த்யா
பும்ஸோ(அ)ப்ரமாய திவி தாவதி பூதபேத:| 
காலாக்யயா குணமயம் க்ரதுபிர் விதன்வன்
தஸ்மை பலிம் ஹரத வத்ஸரபஞ்சகாய
(ஸ்ரீமத் பாகவதம் 3-11-15) 

இந்த ச்லோகம் சூரியனை வணங்குவது. ‘யார் ஒருவர் இவ்வுலகத்தில் காலத்தையே தன்னுடைய கதியால் ஆட்டிப்படைக்கிறாரோ, அந்த சூரியனை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள். நாம் ஒவ்வொருவருமே இறந்த காலத்தை மீட்க முடியாது. 

ராமன் அயோத்தியா பட்டாபிஷேகம் ஆன பிறகு, ஸீதையோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கூறுகிறார். “ஸீதே! இழந்த அனைத்தையும் மீட்டேன். ஆனால், உன்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தேன். அதில் ஒரு நிமிடத்தைக் கூட என்னால் மீட்க முடியாது” என்கிறார். இதிலிருந்து பகவானே, காலத்தை எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும், இந்தக் காலத்தை நீடித்துக் கொண்டே போனால், யுகம் வருகிறது. நம்முடைய 365 நாட்கள் தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களுடைய காலக்கணக்கின்படி 12,000 ஆண்டுகள் சென்றால், அது ஒரு சதுர்யுகமாகச் சொல்லப்படுகிறது. நான் பல வாரங்களுக்கு முன்னால் நான்கு யுகங்களின் அட்டவணையைக் கொடுத்திருந்தேன். நினைவில் கொள்க. க்ருத யுகம் (சந்திகளோடு சேர்ந்து) 4,800 ஆண்டுகள். த்ரேதாயுகம் 3,600 ஆண்டுகள். த்வாபர யுகம் 2,400 ஆண்டுகள். கலியுகம் 1,200 ஆண்டுகள். 

இப்படி ஆயிரம் சதுர்யுகங்கள் கழிந்தால், ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல் முடியும். அதைத்தான் ஒரு கல்பம் என்று கூறுகிறார்கள். அந்தப் பகல் பொழுதில் பதினான்கு மனுக்கள் ஆட்சி புரிவார்கள். ஒவ்வொரு மனுவுக்கும் சுமார் 71 சதுர்யுகம், முழு ஆயுள் ஆகிறது. ப்ரஹ்மாவின் பகல் முடிந்த பிறகு, நைமித்திக பிரளயம் தோன்றும். அதில் முதல் மூன்று உலகங்களான பூ:, புவ:, ஸுவ: ஆகியவை தண்ணீரால் சூழப்படும். நான்காவது உலகமான மஹர்லோகத்தில் இருக்கும் ப்ருகு முதலான ரிஷிகள், அங்கு இருக்க முடியாமல், ஐந்தாவது லோகத்தை அடைந்து வாழ்வார்கள். 

இவ்வளவு நீண்ட காலமுடைய நான்முகனுக்கும், நூறு ஆண்டுகள்தான் ஆயுள். அவருடைய ஓர் ஐம்பதாண்டு பரார்த்தம் என்று சொல்லப்படுகிறது. இப்போது அவருக்கு இரண்டாவது பரார்த்தம். அதாவது இரண்டாவது ஐம்பது ஆண்டுகள் நடந்து வருகின்றன. இதில் முதல் கல்பம் ப்ரஹ்மம் என்றும், இரண்டாவது பாத்மம் என்றும் சொல்லப்பட்டது. இதில் முதல் கல்பம் ப்ரஹ்மம் என்றும், இரண்டாவது ஸ்வேதவராஹம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது ஸ்வேதவராஹக் கல்பத்தில் 28-ஆவது சதுர்யுகத்தில் நாம் உள்ளோம். 

இப்படிப் பலவாறாகப் பிரிந்து, நம்மை ஆட்டிப் படைக்கும் காலம் வைகுந்தத்தில் செயல்படுவதே இல்லை. காலன் நமக்குத்தான் ஈசன். ஈசனுக்கே அது ஈசனாக இருக்க முடியுமா! ஒருக்காலும் இல்லை! 

(தொடரும்) 


நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக